ரூபா 300 மில்லியன் செலவில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பளை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கவுள்ளார்.
இந்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதி 300 மில்லியன் ரூபா நிதிச்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியினை இலங்கையிலுள்ள மக்கள், புலம்பெயர் வாழ் மக்கள், பல நிறுவனங்கள் வழங்கியுள்ளன. அத்துடன், 2011 ஆம் ஆண்டு கலர் ஒப் கரேஜ் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் மஹரகமவிலிருந்து பருத்தித்துறை வரை நடைபெற்ற நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியிலும் இக்கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையை அமைப்பதற்கு 4 ஏக்கர் காணியினை ஈ.எஸ்.பி.நாகரத்தினம், சட்டத்தரணி மாணிக்கஜோதி அபிமஞ்யூசிங்க ஆகிய இருவரும் இணைந்து இலவசமாக வழங்கியுள்ளனர்.
இக்கட்டிட திறப்பு விழாவுடன் சேர்த்து கலர் ஒப் கரேஜ் எனப்படும் புதிய சிகிச்சைப்பிரிவிற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டி வைக்கவுள்ளார்
மேலும் இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
by- Nirujan Selvanayagam