யாழ்.பருத்தித்துறை நீதிமன்றம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு சொந்தவிடத்தில் மீள இயங்கவுள்ளதாக பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சபா.இரவீந்திரன் தெரிவித்தார்.
கடந்த 1940ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட இந் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, கடந்த கால போர் காரணமாக 1985 இல் இருந்து இயங்காத நிலையில் மீண்டும் 1997ஆம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பித்தது.
போர் காலத்தில் இக்கட்டிடத்தின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்திருந்தது. 47 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு பிரதம நிதியரசர் சிராணி பண்டாரநாயக்க மற்றும் ரவூப் ஹக்கிம் ஆகியோரால் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.
கட்டிட வேலைகள் பூரணமாக முடிவடைந்ததையிட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்பிரதாய பூர்வமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது இந்நீதிமன்றம் வதிரியில் தனியார் கட்டடிமொன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.