யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் கடந்த 7 மாதங்களில் 252 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வர்த்தக நிலையங்களில் பொருட்களுக்கான விலைகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்தாமை,குளிர்பானங்கள் போத்தலில் பொறிக்கப்பட்ட விலையிலும் அதிகமாக விற்றமை,துணி வகைகளில் விலைகள் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களின் பேரிலேயே இவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.சாவகச்சேரி, யாழ்ப்பாணம், மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களிலேயே இத்தகைய வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையால் அறிவுறுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-வலம்புரி