இலங்கை வங்கியின் வேலணைக்கிளையில் நேற்று முன்தினமிரவு பல இலட்சம் ரூபாய் பணமும் நகைகளும் கொள்ளையிடுவதற்கான பாரிய முயற்சி பயனற்று கைவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கை வங்கியின் தீவகத்திற்கான கிளை வேலணை வங்களாவடியில் இயங்கி வருகிறது.
இக்கிளையை நேற்றுமுன்தினம் மாலை 5.50 மணியளவில் முகாமையாளர் மூடிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுக்காலை 7.00 மணியளவில் கிளையின் வெளி வளாகத்தைச் சுத்திகரிப்பதற்காகச் சென்ற சுத்திகரிப்பாளர் முன்கதவு திறந்த நிலையிலுள்ளதை அவதானித்து முகாமையாளருக்கும் அருகிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் உள்ள பொலிஸாரிடமும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகாமையாளர் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, முன் கதவின் மூன்று பூட்டுகளும் உடைக்கப்பட்டு பின் அலுவலகக் கதவு உடைக்கப்பட்டு வங்கிக் கிளையின் பாதுகாப்பு பெட்டக அறைக்கதவு உடைத்து கொள்ளையர்கள் உள்நுழைந்தமை கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு பெட்டக அறையினுள் இருந்த இரண்டு இரும்பு பெட்டகங்களும் எரிவாயு (GAS) மூலம் உடைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. எனினும் இரும்புப் பெட்டகம் உடைக்க முடியாத நிலையில் கொள்ளையர்கள் வங்கிக்கிளையின் துவிச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் வங்கிக்கிளையின் முகாமையாளரிடம் கேட்டபோது,
கொள்ளையர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தினுள் இருந்த வங்கியின் பணத்தையும் அடகு நகைகளையும் கொள்ளையிடுவதனையே இலக்கு வைத்து முயற்சித்துள்ளனர். இதனாலேயே வங்கி அலுவலகத்தினுள் இருந்த பல இலட்சம் பெறுமதியான அலுவலக உபகரணங்களை விட்டுச் சென்றுள்ளனர் என்றார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: வலம்புரி