சட்டவிரோதமாக காணி,வீடு பரிவர்த்தனைகளில் பின்னணியில் இருப்போரைக் கண்டுபிடிப்பதற்கு குழுவொன்றை குற்ற விசாரணைத் திணைக்களம் நியமித்திருக்கின்றது என சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்திருக்கிறது.
முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலில் இந்த விசாரணை இடம்பெறுகிறது. போலி ஆவணங்கள், உரிமையாளர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் விடயங்கள், வீடுகளின்
உரிமையாளர்களிடமிருந்து பணத்தை கப்பமாகப் பெறுதல், ஏனையோரின் நிலத்தை விற்றல், அடைமானம் வைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணையை மேற்கொள்ளுமென அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அண்மையில் வெள்ளவத்தையில் தனது குடும்பத்திற்காக தொடர்மாடிக் குடியிருப்பொன்றை கொள்வனவு செய்ய விரும்பியிருந்தார். அவர் ஒரு தரகரை அணுகியிருந்தார்.முப்பது இலட்சம் ரூபா பணம் செலுத்தி வீட்டை வாங்குவதற்கு பதிவு செய்திருந்தார். அவருக்கு இறுதிப் பரிமாற்றம் முடிவுறாத ஆவணங்கள் வழங்கப்பட்டது. மூன்று மாதங்களின் பின்னர் அவர் அந்த வீட்டிற்குச் சென்றபோது அந்த உரிமையாளரின் உறவினரெனக் கூறிய நபரொருவர்
அங்கிருந்ததாகவும் உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கிறார் எனவும் அந்த வீட்டை விற்கவில்லை எனவும் கூறியுள்ளார்.தனக்கு வீட்டை விற்றவரைக் கண்டுபிடிப்பதற்கு சி.ஐ.டி.யின் உதவியை நாடியுள்ளார் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து சென்று திரும்பி வந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பான
முறைப்பாடுகளுக்கு 011232001415, தொலைநகல் 0112380380 என்ற இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.