வலி வடக்கு பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள ஊறணி பிரதேசம் அடுத்த கட்டமாக மீள் குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நேற்றுத் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் நேற்றுக்காலை பலாலியில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் பின்னர் நேற்றுமாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
யாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியமர்வுகளின் ஒரு கட்டமாக ஊறணி பிரதேசம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை பாதுகாப்புப் படைத்தளபதி தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை ஜே/249 தையிட்டி கிராமசேவகர் பிரிவில் அடங்கும் ஊறணி கிராமத்திலிருந்து மக்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்திருந்தனர். 90 ஆம் ஆண்டில் 439 குடும்பங்களைச் சேர்ந்த 1522 பேர் வரையில் வாழ்ந்தனர். தற்போது 217 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேர் மீள்குடியமர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இறுதியாக மாவிட்டபுரம் சந்தி வரையிலான பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர்.
மாவிட்டபுரம் சந்தியிலிருந்து இரண்டரைக் கிலோமீற்றர் தூரத்திலுள்ள காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து பலாலியை நோக்கியதாக ஒரு கிலோமீற்றரில் ஊறணிப் பிரதேசம் அமைந்துள்ளது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் பலாலி விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலேயே இது அமைந்துள்ளது.
ஊறணியில் அமைந்துள்ள தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு வழமையாக அனுமதிக்கும் படைத்தரப்பினர் இந்த வருடம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.