தனியார் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவர்,நடத்துநரால் தான் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் சென்றபோது தான் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அந்தப் பெண் தெரிவித்தவை வருமாறு:
கடந்த 7ஆம் திகதி நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றேன். நல்லூர் பின் வீதியில் பஸ்ஸை நிறுத்துமாறு பஸ் நடத்துநரிடம் கூறிவிட்டு இறங்கிக் கொண்டிருந்தேன். பின்னால் வரும் பஸ்ஸை முந்தவிடாமல் இருப்பதற்காக விரைவாக இறங்கும் படி நடத்துநர் எனது சேலையை இடுப்பில் பிடித்து இழுத்தார். இதனால் பஸ்ஸினுள் எனது சேலை கழன்று விட்டது. இதனால் நான் மான பங்கப்படுத்தப்பட்டேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்துநரிடம் நியாயம் கேட்கமுற்பட்டபோது அவர் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி என்னைத் திட்டித் தீர்த்தார். பஸ்ஸில் இருந்த பயணிகளும் அதிருப்தி தெரிவித்தனர் என அந்தப் பெண் தெரிவித்தார்.இவ்வாறான நடத்துநர்கள் மீது பொருத்தமான நடவடிக்கைகளை யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையம் எடுக்கவேண்டும் எனப் பயணிகள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.