வலிதெற்கு பிரதேசசபையின் தேசிய வாசிப்பு மாத நிறைவு நிகழ்வு “இவ்வுலகில் வெற்றி பெற நூலுலகை உபயோகிப்போம்” என்னும் தொனிப்பொருளில் வலிதெற்கு பிரதேசசபைத் தவிசாளர் த.பிரகாஷ் தலைமையில் வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் புதிய தலைமை அலுவலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வவுனியாமாவட்ட வைத்தியசாலையின் மனநல மருத்துவர் வைத்தியகலாநிதி எஸ்.சிவதாசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தலைவரும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பிரதம நூலகரும் ஆகிய ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம், யாழ்தேசியகல்வியற்கல்லூரி விரிவுரையாளரும் சுன்னாகம் வாழ்வகத் தலைவருமான ஆ.இரவீந்திரன், வலிதெற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் இ.பரமேஸ்வரன், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.தவநாயகம், வலிதெற்கு சனசமூக உத்தியோகத்தர் திருமதி சிவயோகம் செல்வ விநாயகர், வலிதெற்கு ஓய்வூதியர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சீ.நடேசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வுகளாக சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் வைத்தியகலாநிதி எஸ்.சிவதாசனின் மகிழ்வுடன் வாசித்தல் சிறப்புரையும், எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் புத்தாக்க அரங்க இயக்கலைஞர்களின் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் நாடகஆற்றுகையும் நூலக சேவையாற்றிய நூலகர்கள் நூலக உதவியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.