வட மாகாணத்திலும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வாகனங்களில் புகை பரீட்சித்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் வாகணங்களின் புகை பரீட்சித்தல் செயல்முறை நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் வட மாகாணத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலமை காணப்படுகின்றது.
தற்போது ஏனைய மாகாணங்கள் போன்ற வட மாகாணத்திலும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வாகனங்களுக்கான புகை பரீட்சித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கும்படி இலங்கை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச.ஹரிஸ்சந்திரா அறிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் போக்குவரத்துப் பிரிவுகளுக்கு வருடாந்த வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது புகை பரீட்சித்தல் சான்றிதழை பெற்று சரி பார்த்த பின்னரே நடப்பாண்டுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை முதலாம் திகதியில் இருந்து வழங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.