வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் மருதனார்மடத்தில் இயங்கும் என வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, அதற்குட்பட்ட திணைக்களங்கள் நேற்று மருதனார்மடம், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக கட்டடத் தொகுதியின் மேற்தளத்தில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலையிலிருந்து படிப்படியாக எமது பணிகளை யாழ்ப்பாண அலுவலகத்திற்கு மாற்றம் செய்து எதிர்வரும் முதலாம் திகதி முதல் வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மருதனார்மடத்தில் முழுமையாகத் தனது பணிகளை ஆரம்பிக்கும். அத்துடன் வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து தனது பணிகளை மருதனார்மடத்தில் ஆரம்பிக்கும் என வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.