யாழ்.மாவட்டத்துக்கு தடையற்ற மின்விநியோகம் அடுத்த மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்.மாவட்டத்துக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக சுன்னாகம் உபமின் நிலையத்தில் 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
2014 ஆம் ஆண்டு வடபகுதி முழுவதற்கும் மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் வோல்ட் அதியுயர் மின்அழுத்த மின்விநியோகம் இடம்பெறுவதுடன் புதிய மின் மார்க்கத்தின் ஊடாக பரீட்சார்த்தமான மின்விநியோகம் யாழ்.மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு தடையற்ற மின்விநியோகம் சுன்னாகம் உப மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார் என்றார்.
-உதயன்