கடமை நேரத்தின்போது தனியார் வைத்தியசாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று வைத்திய நிபுணர்கள் கொழும்பில் இருந்து வந்த விசேட சோதனைக் குழுவிடம் கையும் மெய்யுமாகச் சிக்கிக் கொண்டனர்.
யாழ்.நகரில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் மூவரே சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து மேலும் தெரிய வருவ தாவது:
யாழ்ப்பாணத்தில் கடமை நேரங்களின்போது அரச வைத்தியசாலைப் பணிகளுக்கு “டிமிக்கி” கொடுத்து விட்டு, தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடும் வழக்கம் அண்மைக் காலமாக அதிகரித்திருந்தது.
இதுகுறித்த புகார்கள் உயர்மட்டத்துக்குச் சென்றதை அடுத்து திடீரென குடாநாட்டில் இதுதொடர்பான சோதனைகளை மேற்கொள்ள விசேட பறக்கும் படை நேற்றுக் களமிறங்கியது.
இந்தக்குழு நடத்திய சோதனையின்போது யாழ்.போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த மூன்று வைத்திய நிபுணர்கள் கடமைநேரத்தின்போது அங்கிருக்கவில்லை. அவர்கள் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது பறக்கும் படையிடம் வசமாகச் சிக்கிக் கொண்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் வைத்தியசாலை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டபோது அவர் கொழும்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.