யாழ். போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு கோரி இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க உப தலைவர் க.கந்தவேல் தெரிவித்தார்.
யாழ். மருத்துவ சங்கத்தினால் நாளை வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு யாழ். நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தாங்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான உணவு தவிர்ப்பு போராட்டமானது மாலை 5 மணிக்கு நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்க உப தலைவர் க.கந்தவேல் மேலும் தெரிவித்தார்.