யாழ். புல்லுக்குளப் பகுதியில் தனியார் பஸ் தரிப்பிடத்தை நவீனமுறையில் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ். மாநாகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முற்றவெளியில் உள்ள மினி பஸ் தரிப்பிடத்தை தற்போது அகற்ற வேண்டியுள்ளதால் மினி பஸ் தரிப்பிடம் புல்லுக்குளத்திற்கும் றீகல் திரையரங்கிற்கும் இடைப்பட்ட மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தனியார் பஸ் நிலையம் யாழ். புல்லுக்குளப் பகுதியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநாகர சபை முதல்வர் தெரிவித்தார்.
மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர சபை உறுப்பினர்கள், தனியார் பஸ் உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், இராணுவ பொறுப்பதிகாரி, நகரப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி, நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், வீதி அதிகார சபை பொறியியலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.