Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது பகடிவதை தாக்குதல்- சிரேஸ்ர மாணவி வழிநடத்தல்

யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் மீது பகடிவதை என்ற பேரில் தாக்கப்பட்டு யாழ். வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவை சேர்ந்த 20 வயதான துரைராஜா தமிழ்செல்வன் என்ற மாணவனை இரண்டாம் வருட மாணவர்களினால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் டு யாழ் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாக்குதல் தொடர்பாக குறித்த மாணவனின் சகோதரர் யாழ் வைத்தியாசாலையிலுள்ள பொலிஸ் காவலரணில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் பல்கலை வட்டாரமொன்று கூறுகையில், நேற்று மதியம் கைலாசபதி கலையரங்கில் புகுமுக மாணவர்களுடன் சிரேஷ்ட மாணவர்கள் உறவினை ஏற்படுத்திக்கொள்வதற்காக ‘மிக்ஸிங் – அப்’ எனும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, குறித்த அரங்கத்திற்கு வந்த நாலைந்து ஆண் மாணவர்களுடன் வந்த சிரேஷ்ட மாணவியொருவர், ‘யார் தமிழ்ச்செல்வன்?’ என வினவியுள்ளார். அதன் பின்னர் குறித்த மாணவர் அடையாளங் காணப்பட்டு, சிரேஷ்ட மாணவர்களால் பலர் முன்னிலையில் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.

இதனால் நிலைகுலைந்து போன புகுமுக மாணவர் கீழே விழுந்த போது, அவரது தலையில் கால்களாலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் மூர்ச்சையடைந்தார். அதன்பின்னர் அவர் நினைவிழந்த சிகிச்சைக்காக நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தது.

மேற்படி மாணவர் இறுதி யுத்தத்தின் போது எறிகணை வீச்சினால் தலையில் படுகாயமடைந்து, தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் நலன்புரி நிலையத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் கல்வி கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்தார் எனவும் அவ்வட்டாரம் தெரிவித்தது.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனை தொடர்பு கொண்டு வினவிய போது,’குறித்த தாக்குதல் தொடர்பில் நான் இதுவரை எதுவும் கேள்விப்படவில்லை. தற்போது இரவு நேரம் என்பதால் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய கடினமாகும்.

எனினும், இது தொடர்பில் நாளை காலை அறிய முயற்சிப்பேன். தற்போது அனைவரினதும் பார்வை யாழ். பல்கலைக்கழகத்தின் மீதுள்ள நிலையில் இவ்வாறான அசம்பாவிதங்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகையினால், இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்று, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com