யாழ். திருநெல்வேலிப் பகுதியில் முதிய குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிலேயே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைச் சேர்ந்த, ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதி வேலுப்பிள்ளை என்ற 72 வயது முதிய குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த முதியவர் திருநெல்வேலிச் சந்தியில் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகின்றாரெனவும் வழமைபோல் நேற்று காலை தொழிலுக்குச் சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பாத நிலையில் தேடியதாகவும் இன்று காலை அயலவர்கள் குறித்த காணி ஒன்றில் முதியவரைக் கண்டதாக தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்ததாக குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர் கையில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் பணம் என்பன சடலத்தில் காணப்படவில்லை எனவும் குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மதியம் அளவில் குறித்த முதியவர் இன்னுமொருவருடன் அந்த இடத்தில் காணப்பட்டதாகவும் அதன்பின் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் காவற்றுறையினர் சடலம் மீட்டுள்ளனர். நிதவான் பார்வையிட்ட பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவற்றுறையினர் தெரிவித்துள்ளனர்.