யாழ். குடாக்கடலில் சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்
யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் ‘டைனமற்’ வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடி மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதுடன், அவர்கள் பற்றிய விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்.இரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இச்சட்டவிரோத மீன்பிடியினால் யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மீது யாழ். பிராந்திய நீரியல்வளத் திணைக்களம் கடும் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் கூறினார்.