யாழ். மாவட்ட பட்டதாரிப் பயிலுநர்கள் ஆட்சேர்ப்பில் யாழ். உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் உள்வாங்கப்படாமையைக் கண்டித்து யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
தென்மாகாணத்தில் உயர் தொழில்நுட்பக் கல்லூரிப் பட்டதாரிகள், பட்டதாரி பயிலுநர்களாக உள்ளவாங்கப்பட்டுள்ளனர். இருப்பினும் யாழ். உயர் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை எனவும் இதனைக் கண்டித்து தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சந்திக்க முடிந்தது.
இவர்களது கோரிக்கை சம்பந்தமாக அமைச்சரவையில் ஆலோசிக்கவுள்ளதுடன், ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி இவர்களுக்கான நியமனங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.