யாழ். இந்துக்கல்லூரியின் இந்து இளைஞன் மலர் வெளியீட்டு விழா நேற்று குமாரசுவாமி மண்டபத்தில் கல்லூரி அதிபர் வீ.கணேசராசா தலைமையில் இடம்பெற்றது.
இந் விழாவிற்கு பிரதம விருந்தினராக ஆறு. திருமுருகன் கலந்து கொண்டார். அவர் அங்கு உரையாற்றுகையில்,
1937ம் ஆண்டு முதலில் வெளிவரத் தொடங்கிய இந்து இளைஞன் இடையில் குடாநாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல்கள் காரணமாக வெளிவரவில்லை. தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. 69 மலர்களைத் தாண்டி இவ் ஆண்டு 70வது மலராக இந்த மலர் வெளிவருகின்றது.
அன்று சம்பிரதாயங்கள், பண்பாட்டு சூழல்கள் என்பனவற்றில் இந்துக்கல்லூரியின் அதிகாரசபை மிகவும் இறுக்கமாகவே இருந்தது. ஆனால் இன்று அதனைத் தட்டிக் கேட்பதற்குக் கூட முடியாத நிலை உருவாகியுள்ளது.
எங்களுக்கு இருக்கின்ற பண்பாடுகள், சம்பிரதாயம் என்பனவற்றில் ஸ்தாபகர்களது தூர நோக்கு என்றுமே சரியாக இருப்பதற்கு எமக்குரிய பண்பாடுகளை நழுவ விடாது செயற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்து இளைஞன் நூற்பிரதியினை கலாநிதி ஆறு. திருமுருகன் வெளியிட்டு வைக்க தேசபந்து க.சிவபாலன் பெற்றுக்கொண்டார்.
இந் நிகழ்விற்கு கனகரத்தினம் மகாவித்தியாலய அதிபர் எ.ஞானகாந்தன், நல்லை ஆதீனக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார், தேசபந்து க.சிவபாலன் மற்றும் மாணவர்கள், பாடசாலைச் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
வருடாவருடம் இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களது ஆக்கங்களைத் தாங்கி இந்து இளைஞன் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.