ஏ- 9 வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவு உடைக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தற்போது ஏ- வீதியை அகலிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அகலிக்கும் போது, யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான செம்மணிப்பகுதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வாசகங்களுடன் உள்ள வீதிவளைவினை உடைக்கவேண்டியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வளைவை உடைப்பதால் உண்டாகும் இழப்பினை ஈடுசெய்வதற்காக பிரதேச சபைக்கு பத்து இலட்சம் ரூபாவை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கமுன்வந்துள்ளது.எனவே வீதி அகலிப்பு பணிகள் முடிவடைந்ததும் அந்த இடத்தில் தமிழர்களது கலாசாரத்தை சித்திரிக்கும் வகையில் புதிய வரவேற்பு வளைவினை அமைக்கவுள்ளோம். குறிப்பாக நல்லூர் இராசதானியின் அடையாளங்களை மையப்படுத்தியதாக இந்தப்புதிய வரவேற்பு வளைவு அமைக்கப்படவுள்ளது.அநேகமாக இந்த வருட இறுதிக்குள் புதியவரவேற்பு வளைவு அமைக்கும் பணிகள் பூர்த்தியடைந்துவிடும் என்றார்.