யாழ் கலட்டி வீரகத்திப் பிள்ளையார் ஆலயச் சூழலில் உள்ள மூன்று வீட்டினுள் நுழைந்த திருடர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக யாழ் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவத்தில் வீடொன்றில் இருந்து 40 ஆயிரம் ருபா பணமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 11 தொடக்கம் 12 மணிவரையான நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாத நேரம் பார்த்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரப் பகுதியில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமையாளர் வீடு, கணனி ஆசிரியர் வீடு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் வீடுகளிலேயே இக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் ஓட்டினைக் கழற்றி உள்ளே இருந்த சீற்றினை உடைத்து அலுமாரிகளைக் கிளறி அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபா ரொக்கப்பணத்தினை எடுத்துச் சென்றனர்.
குறித்த வீட்டில் இருந்த பெண்மணி சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கதவினைத் திறந்து பொழுதுவீட்டினுள் இருந்து நபர் ஒருவர் மதிலால் ஏறி ஓடுவதைக் கண்டுள்ளார். ஏனைய இருவரது வீடுகளும் மேற்குறித்தவாறே உடைத்து அலுமாரிகளைக் கிண்டிக்கிளறி சென்றதாகவும் அங்கு எத்தகைய பொருளோ,பணமோ களவாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.