யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய வைத்தியர்களை யாழ்ப்பாண குடா நாட்டில் நியமிக்குமாறு வட மாகாண சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பில் சுகதார அமைச்சிடம் கேட்ட போது, வைத்தியர்களை அங்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எதிர்வரும் 29ம் திகதி யாழ்ப்பாணத்துக்கான புதிய வைத்திய அதிகாரிகளை நியமிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 100க்கும் அதிகமான வைத்தியர்கள் தேவையாக உள்ளனர் எனினும் 25 பேரே தயார் நிலையில் உள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள், யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற அதிகரித்த பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அங்கு செல்ல தயங்குவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.