யாழ். நகரிலுள்ள கடையொன்றிற்கு வேலைக்காகச் சென்ற இளைஞரொருவர் கடந்த மூன்று நாட்களாக வீடு திரும்பவில்லையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடுவிலைச் சேர்ந்த 21 வயதான கண்ணுச்சாமி தர்சன் என்பவரே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார். இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வன்னியிலிருந்து வந்த குறித்த இளைஞர் சுன்னாகத்திலிருந்த நிலையில் அண்மையில் உடுவில் கிராம அலுவலர் பிரிவுக்கு இடமாற்றம் பெற்று பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி காலை வழமைபோன்று தான் வேலை செய்யும் யாழ். நகரிலுள்ள கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த இளைஞர், மாலையாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், குறித்த இளைஞரின் பெற்றோர் கடை உரிமையாளருடன் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த இளைஞர் கடைக்கு வரவில்லையென கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு குறித்த இளைஞர் சென்றுள்ளாராவென பெற்றோர் தேடிப் பார்த்தபோதிலும் அவர் தொடர்பில் எந்தவித தகவலும் இல்லை. இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞரின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.