சட்டவிரோதமாகன முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மின்சாரம் பெற முயன்ற சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவனும் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்தவருமான செல்வரத்தினம் மயூரன் வயது 15 என்ற சிறுவனே பலியானவர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் குறித்த சிறுவன் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றம் செய்வதற்காக (சாச்) சட்ட விரோதமாக மின்சாரத்தைப் பெற முயன்ற போதே மின்சாரம் தாக்கி பலியானார். சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிசார் விசாரனை மேற்கொண்டு சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே வேளை யாழ் மாவட்டத்தின் கிராமப்புறம் உட்படநகரப்பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுபவர்களுக்கு மின்சாரசபை ஊழியர்களும் பொலிசாரும் இணைந்து சோதனை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தி அபராதம் வழங்கி வருகின்ற போதும் சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மின்சாரம் பெறும் நடவடிக்கையில் சிறுவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக சிறுவர்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.