யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர தெரிவிக்கையில்.
“கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் பயணித்த பயணிகளும் இவ்விவகாரத்தில் தலையிடவே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பெரிதாவதை அறிந்த ஓட்டுநர் பஸ்ஸை சடுதியாக திருப்ப முனைகையில் தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர் எகிறி விழுந்து பஸ் சில்லில் அகப்பட்டு மரணமாகியுள்ளார். பஸ் நடத்துனர், ஓட்டுநர் ஆகியோரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.