குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் தொடரும் மின்வெட்டுக் காரணமாக சிறுவியாபாரம் செய்வோர் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதுடன் தமது அன்றாட வருமானத்தையும் இழக்கவேண்டிய இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மின்வெட்டுக் காரணமாகக் குறிப்பாக இரும்பு ஒட்டுவேலை செய்வோர், தச்சுத் தொழில் செய்வோர், வாகனம் பழுதுபார்க்கும் வேலைகளில் ஈடுபடுவோர், நகை செய்வோர், கடைச்சல் தொழில் புரிவோர், உள்ளூரில் சிறுசிறு உற்பத்திப் பொருள் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் எனப் பலரும் தமது தொழில் முயற்சியில் பெரும் சிரமத்தையும் வருமான இழப்பையும் சந்தித்துள்ளனர்.இந்த நிலை தொடர்ந்தால் இவர்களது தொழில் முயற்சிகள் முற்றாகச் செயலிழக்கும் அபாய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வீதி அகலிப்புக்காக இடைக்கிடை மின்சாரம் நிறுத்தப்படுவதால் மின்சாரத்தையே நம்பி தொழில் செய்யும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாம் பொறுப்பேற்கும் வேலைகளைக் குறிப்பிட்ட தினங்களுக்குள் வழங்க முடியாமல் அவர்கள் திண்டாடுகிறார்கள்.
நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து என்று மில்லாதவாறு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு பிரதான வீதிகளை அகலமாக்கவேண்டிய கட்டாய தேவையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பருத்தித்துறை, காங்கேசன்துறை ஆகிய வீதிகள் அகலமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.
வீதிகளை அகலமாக்கும் போது மின்கம்பங்களையும் அதற்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இப்பணிக்காக வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மின்சாரத்தை நிறுத்தவேண்டிய நிலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அது மட்டுமன்றித் தினமும் நேரகாலம் இல்லாமல் முன்னறிவித்தல் இல்லாமல் மணிக் கணக்கில் மின்தடை ஏற்படுகின்றது. மின்தடை இடம் பெறாத நாளே கிடையாது என் கின்றனர் குடாநாட்டு மக்கள்.
இதனால் மின்சாரத்தை நம்பி இரும்பு வேலைகள் உட்பட மற்றும் வேலைகளைச் செய்து வரும் சிறுசிறு தொழிற்சாலை கள் தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவற்றின் வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்டவர் கள் இதனைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.