யாழ். மாவட்ட நீதிமன்றத்துக்கு விவாகரத்து வழக்கொன்றிற்காக சமூகமளித்த பெண்ணொருவர் முன்னாள் நீதிபதி திருமதி இளங்கோவனை தாக்கிய சம்பவமொன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
இச்சம்பவத்தை அடுத்து, நீதிமன்றத்தில் கடமையில் நின்ற பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இருப்பினும் குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மன்றில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். நீதிவான் மா கணேசராஜா உத்தரவிட்டார்.
குறித்த பெண்ணிடமிருந்து விவாகரத்து கோரி அவரது கணவனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை யாழ். மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றுக்கு வந்த குறித்த பெண், அங்கு வருகை தந்திருந்த முன்னாள் நீதிபதி திருமதி இளங்கோவன் யாழ். மேல் நீதிமன்றிற்கு செல்லும் மாடிப்படிகளில் ஏறும் போது தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.