குளத்து நீரில் இறங்கி விளையாடிய இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இந்தப் பரிதாபகரமான சம்பவம் மிருசுவில் வடக்கில் இடம்பெற்றுள்ளது. தவசிக்குளத்தைச் சேர்ந்த சந்திரகுமார் இசைப்பிரியன் (வயது 3), மிருசுவில் வடக்கைச் சேர்ந்த செல்லக்குமார் தர்மிதா (வயது 3) ஆகிய குழந்தைகளே உயிரிழந்தன.
குளத்து நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கையில் அதிலிருந்த கிடங்குக்குள் குழந்தைகள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று குளத்தில் இறங்கி சடலங்களை மீட்டவர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைத் திடீரெனக் காணவில்லை என்று தேடிய பெற்றோர் காலடித் தடங்களைப் பின் தொடர்ந்தபோது அவை குளத்துக் கரையில் போய் முடிந்ததைக் கண்டனர். நீச்சல் தெரிந்தவர்கள் அழைக்கப்பட்டு குளத்தில் இறங்கித் தேடிய போது இரு குழந்தைகளதும் சடலங்கள் கிடைத்தன.
உயிரிழந்த இசைப்பிரியனின் தந்தையும் தர்மிகாவின் தாயும் சகோதரர்கள் அவர்கள் தோட்ட வேலைக்குச் சென்றிருந்த சமயம், பிள்ளைகளை உறவினர்கள் வீட்டில் விட்டிருந்தனர்.
வீட்டின் முன்புறம் நின்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. 12.30 மணியளவில் பெற்றோர் வந்து தேடிய போதே குழந்தைகள் காணாமல்போனமை தெரியவந்தது. அதிர்ச்சியூட்டும் இந்தச் சம்பவத்தால் குழந்தைகளின் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் கூடி இருந்த உறவினர்களின் அழு குரல்களாலும் கதறல்களாலும் அந்தப் பகுதியே துயரத்தில் மூழ்கி இருந்தது. சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.