வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் மக்கள் அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மாவிட்டபுரம் தெற்கு அரசடி வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பழுதடைந்த நிலையில் 250 மூடை உலர் உணவுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாவிட்டபுரம் தெற்கு ஜே/231 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றின் கிணற்றிலிருந்தே இந்த உலர் உணவு மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுபற்றி மேலும் தெரிய வரு வதாவது:
வலி.வடக்கில் மாவிட்டபுரத்தில் அரசடி வீதியில் உள்ள தனியார் வீடொன்றின் கிணற்றினை வீட்டுக்காரர் துப்புரவு செய்ய முயன்றுள்ளார். இதன் போது கிணற்றில் உணவு மூடைகள் இருந்தமை தெரிய வந்துள்ளது.
நேற்றுமுன்தினம் இந்த மூடைகள் கிணற்றில் இருந்து மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ளது. இதில் சில உரைப்பைகளில் உலக உணவுத் திட்டத்தின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூடைகளில் அரிசி, கடலை, பருப்பு, பயறு, கோப்பி, மிளகு, நெஸ்பிறே போன்ற உலர் உணவுப் பொருள்கள் அடங் கியிருந்தன. இவை அனைத்தும் சில மாதங்களுக்கு முன்னர் கிணற்றுக்குள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள மற்றுமொரு தனியார் வீட்டுக் கிணற்றிலிருந்தும் 150 மூடை உலர் உணவுப் பொருள்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.