யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் விடுதி எதிர்வரும் 15 ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.சிவனேஸ்வரன் தெரிவித்தார்.
இம் மாணவர் விடுதிக் கட்டிடமானது மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தொழிலதிபருமான ஸ்ரீரஞ்சன் நடராசா என்பவரால் 90 இலட்சம் ரூபா நிதியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்க விரும்புகின்ற மாணவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்பாக அனுமதிகளினை பெற்றுக்கொள்ளுமாறு இக்கல்லூரி அதிபர் தெரிவித்தார்.
இக்கல்லூரியில் கற்கும் திறனுள்ள மாணவர்கள் காணப்பட்டாலும் வறுமை காரணமாக கல்வியினை தொடர முடியாதுள்ள மாணவர்கள் இவ்விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் வறுமை காரணமாக விடுதியில் தங்கியிருந்து கல்வியினைப் பயிலவுள்ள மாணவர்களிற்கு உதவிகளை வழங்க விரும்புகின்றவர்கள் பாடசாலைச் சமூகத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.