மானிப்பாயில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சைவக் குருக்களின் மனைவி படுகாயம் அடைந்தார். நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபாலேந்திரன் நிமேஷா (வயது 31) என்பவரே படுகாயம் காயமடைந்தவர் ஆவார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நேற்று இரவு 7.30 மணியளவில் ஆலயப் பூசை உபயகாரர்களுக்குத் தகவல் கொடுப்பதற்காக ஸ்ரீபாலேந்திரனும் அவரது மனைவி நிமேஷாவும் மானிப்பாய் கியூமெடிக்கா இன்ரநஷனல் பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குச் சென்றுள்ளனர். அங்கு வீட்டாருடன் வீதியோரமாக நின்று கதைத்துக்கொண்டு நின்றவேளை ஹீரோகொண்டா மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருவர் நிமேஷாவின் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
காலில் காயமடைந்த நிமேஷா உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரின் காலில் துப்பாக்கி ரவைகள் இருந்ததால் நேற்று இரவு அவருக்குச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து படையினரும் பல இடங்களிலும் சேதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.