யாழ். கொக்குவில் கிழக்கு, பொற்பதி பிள்ளையார் ஆலயத்துக்கு பின்புறமாக அமைந்துள்ள காணியொன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த பல வருடங்களாக துப்பரவு செய்யப்படாதிருந்த பற்றைக்காணியை இன்று பிற்பகல் பொற்பதி இளைஞர்கள் துப்பரவு செய்த வேளையிலேயே மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
எலும்புக் கூடுகளைக் கண்ட இளைஞர்கள், கோப்பாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் எலும்புக் கூட்டு எச்சங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பற்றிய விபரங்கள் எவையும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எச்சங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.