Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பாகற்காய் பறிக்க வந்த இளைஞனைப் பன்றிக்குப் பாய்ச்சிய மின்சாரம் பலியெடுத்தது

மிளகாய்த் தோட்டத்தில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் தெல்லிப்பழை கட்டுவன் மேற்கில் இடம்பெற்றது. இதில் கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சந்திரசேகரன் பாக்கியராஜ் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாவது,

இரவு வேளைகளில் மிளகாய் தோட்டத்திலே பன்றிகள் நாசம் செய்வதனை தடுப்பதற்கு அண்மைய சில நாட்களாக தோட்ட உரிமையாளரினால் மின்சாரப் பொறி வைக்கப்பட்டு வந்தது. இம்மின்சாரப் பொறிக்கு தோட்ட உரிமையாளர் அருகில் உள்ள தனது வீட்டிலிருந்து மின் இணைப்பை வழங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு மூன்று இளைஞர்கள் இணைந்து அப்பகுதியிலிருந்த தோட்டத்தில் பாகற்காய்களை பிடுங்கிச் செல்கையில் ஒருவர் மின்சாரப் பொறியில் மாட்டிக் கொண்டார். அப்போது மற்றையவர் எழுப்பிய கூக்குரலில் வீட்டு உரிமையாளர் பொறிக்கான மின்சார இணைப்பை துண்டித்துள்ளார். இதற்கிடையில் மூவரில் ஒருவர் பாகற்காயுடன் தப்பிச் செல்ல மற்றையவர் ஆட்டோ பிடித்து வருவதாக தோட்ட உரிமையாளரிடம் தெரிவித்துத் தப்பித்துள்ளார். இந்நிலையில் மின்சாரம் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார். இவ்வாறு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி கிராம சேவையாளர் ஊடாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தோட்ட உரிமையாளரினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தப்பித்த இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமான முறையில் பொறிவைப்பதற்கு மின்சாரத்தை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் தெல்லிப்பழை பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்தி யசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com