மினிபஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த பெண் ஒருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் வகையாக மாட்டிக்கொண்டார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 751 இலக்க மினிபஸ்ஸில் 7 வயதுச் சிறுமி ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலி அந்தப் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரால் அறுக்கப்பட்டது.
தனது மகளின் சங்கிலி அறுக்கப்பட்டதை அறிந்த குறித்த சிறுமியின் தாய் தனது கைத்தொலைபேசி மூலம் சங்கிலி களவாடப்பட்ட விடயத்தையும் தான் பயணம் செய்த பஸ்ஸின் இலக்கத்தையும் பொலிஸாருக்குக் கூறியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட வல்வெட்டித்துறைப் பொலிஸார் குறித்த பஸ்ஸை மோட்டார் சைக்கிளில் கலைத்துச் சென்று வழிமறித்தனர். உடனடியாக பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பொலிஸாரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறிப்பிட்ட சங்கிலி பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவரிடமிருந்து சோதனையின் போது கைப்பற்றப் பட்டது. இதனை அடுத்து குறித்த பெண் வல்வெட்டித்துறைப் பெலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.