யாழ்ப்பாணம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மீண்டும் தனது பழைய இடத்தில் இயங்கவுள்ளதால் எதிர்வரும் 29ஆம் 30ஆம் 31ஆம் திகதிகளில் உள்ளக நோயாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்களென ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எ.ன்ஐயக்குமரன் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனது பழைய கட்டிடமான வறுத்தலை விளானிலுள்ள கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகால இடைவெளியின் பின்னர் இயங்கவுள்ளது.
தற்போது தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலைக் கட்டிடத்தில் இயங்கி வரும் இவ்வைத்தியசாலையின் தளபாடங்கள,; விடுதிகளுக்கான கட்டில்கள் உட்பட ஏனைய பொருட்களையும் மாற்ற வேண்டியுள்ளதாகவும் இதனால் இந்த 3 நாள்களும் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலைகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையிலேயே உள்ளக நோயாளர்களும் அனுமதிக்கப்படமாட்டார்களெனவும் அவர் கூறினார்.
வெளிநோயாளர் பிரிவும் நண்பகல் 12 மணிவரை மாத்திரமே இயங்கும். பிற்பகல் இயங்கமாட்டாது.
இதேவேளை, அவசர நோயாளர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் மாற்றப்படுவார்களெனவும் வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.