வரலாற்றுப் பெருமை வாய்ந்த தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் பெருந் திருவிழா நேற்று திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலை 9.20 மணியளவில் ஆரம்பமான கொடியேற்றத் திருவிழாவில் யாழ். மாவட்டத் தின் பல பாகங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களைக் செலுத்துவதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டதைக் காணக் கூடியதாகக் இருந்தது.
ஆலயச் சூழலில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெறும். தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நடவடிக்கைகள் சந்நிதியான் ஆச்சிரம மண்டபம் உட்பட அனைத்து மடங்களிலும் இடம்பெறவுள்ளன.
திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரும் அறிவுறுத்தல்களை ஒலி பெருக்கிகள் மூலம் ஆலய நிர்வாகத்தினரும், பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.