யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட கலைப்பீட மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் மூவரை பல்கலைக்கழக நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பகிடிவதைக்கு உட்பட்ட தில்லைநாதன் தனராஜ் என்ற மாணவன், தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலைப்பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்கள் மூவரை பல்கலைக்கழ நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின் காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இடைநிறுத்தி பின் இவ்வாறானவர்களை உள்வாங்குவதால் இனிவரும் காலங்களில் பகிடிவதையை ஒழிக்கமுடியாது பகிடிவதையில் ஈடுபடுவோரை பட்டப்படிப்பை தொடரமுடியாது செய்தால் பலன் கிட்டும் என்பது பலரதும் கருத்து.