நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு வரிசையை ஆரம்பித்து வைத்திருந்தவரான உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தோற்றுனர் வண. சேவியர் தனிநாயகம் அடிகளாரால் நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வைபவ முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.
யாழ் நகரம் சோடனைகளாலும், மின் அலங்காரங்களாலும், சப்புறங்களாலும் விழாக் கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்பாக நடைபெற, அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்த வெளியரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலும் மாலையில் நடைபெற்றன.
வரலாறு
1964 ஜனவரியின் ஆரம்பத்தில் புதுடெல்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின் போது தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுடெல்லியிற் கூடி உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர்.