நல்லூர் கந்தனின் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வம் வேளையில். நாளாந்தம் பக்தர்களும் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர் கூட்டத்துக்கும் குறைவே இல்லை.
இவ்வாறு வரும் இளைஞர்கள் நல்லூர் ஆலயச்சூழலில் பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னிலங்கையில் வந்த சிலர் பச்சை குத்தும் வியாபார நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் எங்கள் இளைஞர் பட்டாளம் பச்சை குத்துவதற்கு வரிசையில் “நான் முந்தி நீ முந்தி” என்று காத்துக்கொண்டிருக்கிறது.
பச்சை குத்துவதற்குப் பாவிக்கும் ஊசிகள் ஆபத்தானவை. ஒரே ஊசி பலருக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சுகாதாரமற்ற ஊசிகளால் எத்தனையோ பயங்கரமான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உண்டு. எயிட்ஸுக்கு காரணியான எச்ஐவி தொற்றும் பேராபத்தும் ஏற்பட வாய்ப்புண்டு.இந்த ஆபத்தை விபரீதங்களை அறியாமல், உணராமல் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பச்சை குத்துவதற்கு வரிசையில் நிற்கின்றனர்.நல்லூரில் பச்சை குத்தும் விடயம் தொடர்பாக நோயாளர் மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் விசுவலிங்கம் கந்தவேளும் பொதுமக்களை விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.
-உதயன்