நல்லூர் ஆலய வீதியில் கந்தனின் தேர் பவனி வந்தபோது சன நெரிசலைப் பயன்படுத்தி 20 லட்சம் ரூபா பெறுமதியான 40 பவுண் நகைகள் நேற்றுத் திருடப்பட்டன.
தாலிக் கொடிகளை அறுக்க முயன்ற இரு பெண்கள் கையும் களவுமாகக் பிடிக்கப்பட்டனர். நகைத் திருட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சில இளைஞர்களைத் தாம் கைது செய்துள்ளனர் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பத்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸார் கூறினர். அநேகமான திருட்டுகள் கால் கழுவும் பகுதிகளிலும் ஆலய உள் வீதியிலுமே இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆலய உள் வீதியில் தாலிக் கொடி அறுக்க முற்பட்டபோதே இரு பெண்கள் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுத் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.
ஆலயத்தின் உட்பகுதியில் ஒன்றும், வெளிப்பகுதியில் நான்குமாக ஐந்து தாலிக்கொடிகள் களவாடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. 7இக்கும் மேற்பட்ட தங்கச் சங்கிலிகளும் களவாடப்பட்டுள்ளன.ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பேர்ஸ் உள்ளிட்ட பல பொருள்கள் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன என்றும் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
சுமார் 2000 வரையான தொகையுடன் கிடைத்த பேர்ஸ் ஒன்றை உரியவர்களிடம் சுகாதாரத்துறையினர் கையளித்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
1000 பொலிஸார். கடமையில்
திருட்டுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1000இக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பொலிஸார் சீருடையிலும் சிவில் உடையிலும் ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர தொண்டர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
புத்திசாலி இளைஞிகள்
ஆலயத்துக்கு நகை அணிந்து வராதீர்கள் என்று பொலிஸார் ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் காட்டுக் கத்தல் கத்தியபோதும் கணிசமான பெண்கள் தங்க நகைகளுடனேயே ஆலயத்துக்கு வந்திருந்தனர் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இளம் பெண்கள் தங்க நகைகளுக்குப் பதிலாக, “ரோல் கோல்ட்’ மற்றும் “பாஷன்’ நகைகளையே அணிந்து வந்தனர். இதனால் இவர்களிடம் திருடர்களின் கைவரிசை செல்லாது போய்விட்டது.