வட பகுதி மக்களுக்கான புகையிரதச் சேவையை விரைவாக வழங்கும் நோக்குடன் ஆனையிறவுக் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கொங்கிறீற் அணை கட்டும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறன்றன. இந்திய புகையிரத நிறுவனம் இப் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
பழைய புகையிரதப் பாதை கடலுடன் நெருக்கமாக உள்ள நிலையில் இப் பாதையைப் பாதுகாப்பானதாக அமைக்கும் நோக்கில் கொங்கிறீற் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு நிறைவுறும் நிலையை அடைந்துள்ளது. கடலுக்கும் நிலத்திற்கும் இடையிலான புகையிரத வீதிக்கான நிலப்பகுதியைத் தயார்படுத்தப்படும் வேலையும் நடைபெற்று வருகிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கு முந்திய கட்டுமானங்கள் யாவுமே அழிவடைந்துள்ள நிலையில் கடல் அரிப்பிற்கு உள்ளாகாத வகையில் தற்போது புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறன.
இதேவேளை ஆனையிறவில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிய புகையிரத நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் கடந்த 24-07-2013 அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தென் பகுதி பாடசாலை மாணவர்களின் நிதி சேகரிப்பின் மூலம் இத் தொகை திரட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சிக்கான புகையிரத பாதை அமைக்கப்பட்டு நிறைவுற்று கடந்த வாரம் பாரிட்சார்த்தமாக வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் இரண்டு புகையிரதங்கள் பயணித்தமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கிளிநொச்சிக்கான உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளது.
-நிருஐன்