தொடர்ந்து பெய்துவரும் அடமழை காரணமாக திருநெல்வேலி சந்தை நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக சந்தைக் கட்டடத் தொகுதியின் நடைபாதைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதோடு, இந்தப் பகுதி சேறும் சகதியுமாக காணப்படுவதால், இங்குள்ள வியாபாரிகள் மற்றும் மரக்கறிகைளை கொள்வனவு செய்யவரும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த சந்தைக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடி நவீன சந்தையாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கீழ்த் தளத்தில் மரக்கறி வியாபாரிகளும், பலசரக்கு வியாபாரிகளும் வெள்ளத்தில் தத்தளிப்பதாக மரக்கறி வியாபாரி ஒருவர் வேதனையோடு தெரிவித்தார்.
மழை நீரிலிருந்து மரக்கறிகளை பாதுகாக்க பொலித்தீனால் மூடி வைத்து வியாபாரம் செய்வதாலும், பொதுமக்கள் சந்தைக்கு வர தயக்கம் காட்டுவதாலும் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு , நஷ்டம் ஏற்படுவதாகவும் இந்த வியாபரி கூறினார்.
அக்றை காட்டவேண்டிய பிரதேச சபை தமது தேவைகளை கருத்தில் கொள்வதில்லை என குற்றஞ்சாட்டிய மற்றுமொரு வியாபாரி, தாம் வியாபாரம் செய்யும் இடத்திற்கு நாளொன்றுக்கு 40ரூபா வாடகைப் பணம் செலுத்துவதாக கூறினார்.
அத்துடன், மரக்கறிக் கொள்வனவாளர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதால் போதியளவு வருமானம் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்ட இந்த வியாபாரி,“ நாளொன்றுக்கு 40 ரூபா வாடகையை எங்களால் செலுத்த முடியாதுள்ளது” என்றார்.
மழை வெள்ளத்தில் பெரும் சிரமத்தின் மத்தியில் வியார நடவடிக்கையில் ஈடுபடும் வியாரிகளிடம் தினமும் வாடகைப் பணம் வாங்கச் செல்வதால் அவர்களிடையே குழப்பநிலை உருவாகியுள்ளதாகவும், இவர்களின் நிலை இவ்வாறிருக்க வாடகைப் பணம் வாங்குவதற்கே தனக்கு மனவேதனையாக இருப்பதாகவும், இந்த சந்தைக் கட்டடத் தொகுதியின் குத்தகைதாரர் குறிப்பிட்டார்.
பிரதேச சபை தங்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை எனவியாபரிகள் குற்றஞ் சாட்டுகின்றபோதும், சந்தைக் கட்டடத் தொகுயில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் பிரதேசபை தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.
நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீரை வெளியேற்றி வருகின்றபோதும், வீதியின் உயரத்தை விட சந்தைப் பகுதியின் நிலம் தாழ்வாகக் காணப்படுவதால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படுகின்றது.
ஜனவரி 1ஆம் திகதி முதல் சந்தையின் செயற்பாடுகள் அனைத்தும் நவீனமயப் படுத்தப்பட்டுவரும் 2ஆம் மாடிக்கு மாற்றப்படவுள்ளதாக நல்லூர்ப் பிரதேச சபை செயலாளர் சாந்தசீலன் தெரிவித்தார்.
திருநெல்வேலிச் சந்தையின் நிலை குறித்து சாந்தசீலனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீதியின் உயரத்தைவிட சந்தையின் நிலப்பகுதி பதிவாகக் காணப்படுவதால் வீதியிலுள்ள நீரும் வழிந்தோடி சந்தைக்கு புகுந்துவிடுவதாகவும், இதனாலேயே நீரை வெளியேற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வியாபரிகளின் நன்மை கருதி இவற்றை சீர்செய்ய பிரதச சபை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
சந்தையின் வியாபார மேடையளவிற்கே தாழ்வாகக் காணப்படும் நிலமும் உயர்த்தப்படவுள்ளதுடன், நடைபாதை உட்பட அனைத்துப் பகுதியும் சீமெந்திடப்படவுள்ளன.
மேல் தளத்திற்கு செல்ல மறுக்கும் வியாபாரிகள்.
மேல்தளத்திற்கு சென்று வியாபர நடவடிக்கையில் ஈடுபட வியாபரிகள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி மூடை சுமக்கும் கூலியாட்களுக்கு 1 மூடை சுமப்பதற்கான தற்போது வழங்கிவரும் 30 ரூபா கூலியானது மேல்த் தளத்திற்கு சுமப்பதாக இருந்தால் 100 ரூபாக அதிகரிக்கும். அத்துடன் வியாபார இடத்திற்கு கொடுத்துவரும் வாடகையிலும் மாற்றம் ஏற்படும். அத்துடன் வயதானவர்கள் மரக்கறிகளைக் கொள்வனவுசெய்ய மேல்த்தளத்திற்கு ஏறி வரமாட்டார்கள். எனப் பல்வேறு காரணங்களைக் கூறும் வியாபாரிகள்,
இவ்வாறான காரணங்களால் இலாபத்தை விட நஷ்டமே அதிகம் ஏற்படும் என்றும், பழைய கட்டடத்துக்கு மேலே புதிய கட்டடம் அமைக்கப்படுவதால் அது உறுதியான கட்டடமாக விளங்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.இது இவ்வாறிருக்க தம்புள்ளையிலிருந்து வரும் மரக்கறி வகைகள்கூட திருநெல்வேலிச் சந்தைக்கே வந்துசேருகின்றன. பின்னர் அங்கிருந்தே ஏனைய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்டுகின்றன்றமை குறிப்பிடத்தக்கது.