அல்வாய் வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குத் திருடுவதற்காக வந்த நபர்கள் அவ்வீட்டில் நின்ற கறவை மாட்டைக் கத்தியால் குத்திக் கிழித்த சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
கடந்த 9ஆம் திகதி இரவு இவ்வீட்டிற்குள் புகுந்த விசமிகள் அங்கு திருடுவதற்கு முற்பட்டிருக்கின்றனர். அவர்களின் திருட்டு முயற்சி பயனளிக்காத நிலையில் கன்று ஈன்று கறவை மாடாக அவ்வீட்டில் நின்றிருந்த 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாட்டை முதுகுப் பகுதியில் கத்தியால் குத்தி வயிற்றுப் பகுதிவரை கிழித்துள்ளனர்.
காலையில் வீட்டுக்காரர் எழும்பிப் பார்த்த போது மாடு இரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் அப்பகுதி கிராம சேவையாளருக்கும், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பசுமாட்டை இந்துக்கள் கோமாதா என வழிபடும் இக்காலத்தில் ஒரு பசுமாட்டைக் கொடூரமாகக் கொன்றுள்ளமையானது வேதனை தரும் விடயமாகும்.