டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பயனளிக்காது மரணமானார். வீ.எம்.றோட் பருத்தித்துறையைச் சேர்ந்த சுரேஸ் அபர்னா (வயது6) என்ற சிறுமியே இவ்வாறு மரணமானவராவார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது
கடந்த 19ஆம் திகதி குறித்த சிறுமி தனது குடும்பத்தவர்களுடன் கொழும்புக்குச் சென்று அங்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு திரும்பியுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி குறித்த சிறுமி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
ஆனாலும் காய்ச்சல் நின்றபாடில்லை. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பருத்தித்துறை வைத்தியசலைக்குச் சென்றார். இரத்தம் பரிசோதிக்க வேண்டும் என்றும் அந்த வசதி வைத்திய சாலையில் இல்லை எனவும் குறித்த சிறுமியை திருப்பி அனுப்பியுள்ளனர்.
அன்றைய தினமே பருத்தித்துறையில் உள்ள தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் குறித்த சிறுமி இரத்தப் பரிசோதனையை மேற்கொண்டார். அதன்போது சிறுமிக்கு டெங்கு நோய்க்கான அறி குறி காணப்பட்டதனால் மறுநாள் திங்கட்கிழமை திரும்பவும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் குறித்த சிறுமி மரணமானார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.