2011ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளதென பரீட்சை ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலும் இருந்து சுமார் 5இலட்சத்து 50ஆயிரம் மாணவர்கள் இவ் ஆண்டு சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதற்காக 3000 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன் பரீட்சை மேற்பார்வையாளர்கள் மற்றும் இணைப்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படவுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இப் பரீட்சையானது எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகி 21ம் திகதியுடன் அனைத்துப் பாடங்களும் முடிவடையுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் நடைபெற்று முடிந்த க. பொ. த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.