கோப்பாய் பிரதேசத்திற்குட்பட்ட அரச காணிகளில் தங்கியுள்ள மக்களுக்கான காணி உரிமம் வழங்க பிரதேச செயலகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோப்பாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கோப்பாய் பிரதேசத்தில் உரம்பிராய், யோகபுரம் பகுதி மற்றும் புத்தூர் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் அரச காணிகளில் குடியேறியிருக்கின்றனர். யோகபுரம் பகுதியில் 15 குடும்பங்களும் புத்தூர் மேற்குப் பகுதியில் 27 குடும்பங்களும் அரச காணிகளில் குடியேறியிருக்கின்றனர்.
தொடர்சியாக காணி உரிமம் வழங்க வேண்டும் என்று மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு நடமாடும் சேவை ஒன்றை நடத்தி அவர்களுக்கான காணி உரிமத்தை வழங்க கோப்பாய் பிரதேச செயலகம் தீர்மானித்துள்ளது.