கைதடி அரச இல்லத்தைச் சேர்ந்த இரண்டாவது குழந்தையும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன அதேசமயம் மற்றும் ஒரு குழந்தை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
கைதடி அரச சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சதீஸ் என்ற இரண்டுமாதக் குழந்தையே நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தை நேற்றுமுன்தினம் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் கைதடி அரச சிறுவர் இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு மீண்டும் கடுமையான காய்ச்சல் ஏற்பட யாழ். போதனா வைத்திய சாலைக்கு குழந்தை எடுத்து வரப்பட்டது. எனினும் அந்தக் குழந்தை யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவிலேயே இறந்துள்ளது.மற்றைய குழந்தை கடுமையான சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே கைதடி அரச சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த பவித்திரா என்ற பிறந்து 53 நாளேயான குழந்தையும் பால்புரைக்கேரி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் குறித்த சிறுவர் இல்லத்தை மேற்பார்வை செய்யச் சென்ற குழுவினரால் கைதடி சிறுவர் இல்லம் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய இயங்க வில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.