கைதடிச் சந்தியிலிருந்து தனது வீடு நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போன சம்பவம் கைதடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கைதடியில் இடம்பெற்றுள்ளது.கைதடி கிழக்கைச் சேர்ந்த செல்வி மனோகரன் வின்சியா (வயது 21) என்ற இளம் பெண்ணே காணாமல் போனவராவார்.
இவர் தனது தாயாருடன் யாழ். நகர் சென்றுவிட்டுக் கைதடிச் சந்தியில் தாயாருடன் பஸ்ஸில் இருந்து இறங்கியதாகவும், தாயார் கடைக்குச் சென்றவேளை இவர் சைக்கிளில் தனியாக கைதடிச் சந்தியிலிருந்து பெற்றோல் நிலைய வீதியூடாகத் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினரை விரும்பித் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே இவர் காணாமல் போயுள்ளதாகவும் இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாகப் பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.