குறிகாட்டுவான்-நெடுந்தீவுக்கிடையில் சேவையில் ஈடுபடுவதற்குப் புதிதாகக் கட்டப்பட்ட படகு எதிர்வரும் 9 ஆம் திகதி புதன்கிழமை வெள்ளோட்டத்திற்காக விடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தலாவல கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய படகு கடந்த சனிக்கிழமை காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. கொழும்பில் இருந்து கடற்படையினர் இந்தப் படகை இங்கு எடுத்து வந்திருந்தனர்.
நாளை செவ்வாய்க்கிழமை இந்தப் படகு குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு வந்து சேரும் எனவும் மறுநாள் புதன்கிழமை அது நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்குமிடையே வெள்ளோட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய படகின் பயணிகள் சேவை 10 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பயணிகள் படகில் 200 பேர் வரை ஏற்றக் கூடிய வசதி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.