கிறீஸ் பூதம் என்ற போர்வையில் யாழ். குடாநாட்டில் தற்போது கிளப்பப்பட்டிருக்கும் பீதியைக் கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும் சனிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் யாழ். குடாநாட்டில் உள்ள ஓர் ஆலய முன்றலில் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணிஅலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு வார காலமாக நிலவிவரும் பதற்றம் பற்றி விரிவாக ஆராயப்பட்டுக் கருத்துகள் பரிமாறப்பட்டன.